‘இந்தியா’ கூட்டணியின் அழைப்பை நிராகரித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஓரிரு மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியும் பிற கட்சிகளை தங்கள் வசம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வாரம் இந்தியா கூட்டணியின் கதவுகள் மாயாவதிக்காக திறந்து இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் தெரிவித்த நிலையில், மாயாவதி அழைப்பை நிராகரித்ததுடன் தனித்து போட்டியிடவுள்ளதாக உறுதிபட தெரிவித்தார்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவின் சஞ்சய் சேத்துக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்எல்ஏ வாக்களித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய பகுஜன் எம்எல்ஏ, “சஞ்சய் என்னிடம் ஆதரவு கோரினார், ஆனால் இந்தியா கூட்டணியில் இருந்து யாரும் ஆதரவு கேட்காததால் பாஜக வேட்பாளருக்கு மாயாவதியின் அனுமதியுடன் வாக்களித்தேன்.” என்று தெரிவித்தார்.
மேலும், மாயாவதி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தாலும், மறைமுகமாக நிறைய விஷயங்கள் நடக்கும் என்றும், பாஜக கூட்டணி குறித்து பரிசீலிக்கலாம் என்றும் பகுஜன் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாயாவதியின் அடுத்த நகர்வை அரசியல் கட்சிகள் உற்றுநோக்கி வருகின்றனர்.