மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத்திருத்தத்தால், லாரி உரிமையாளர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நாடு முழுவதும் நடைபெற்றுவரும் இந்தப் போராட்டம் 2வது நாளை எட்டியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி. எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
லாரிகளில் பெட்ரோல், டீசல் கொண்டு சென்று நிரப்பாததால், எரிபொருள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
இந்தப் போராட்டம் நீடித்தால், எரிபொருள் தட்டுப்படு அதிகரிக்கும் என்பதால், வடமாநிலங்களில் பொதுமக்கள் பலர் தனியாக கேன்கள் கொண்டுவந்து பெட்ரோல், டீசலை வாங்கிச்செல்கின்றனர்.
இதனால், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மக்கள் வரிசையில் நின்று பெட்ரோல், டீசலை வாங்கிச்சென்று இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இது ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சியை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்த 3 சட்டங்களை மாற்ற மத்திய அரசு புதிய மசோதாக்களை கொண்டு வந்தது. இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா என பெயர் மாற்ற பரிந்துரைத்தது.
பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின்படி ஹிட் & ரன் எனப்படும், விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகன ஓட்டுநர் தப்பிச்செல்லும் விவகாரத்தில் அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹிட் & ரன் வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. இந்த வழக்கில் முன்பு, 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.