நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட நீலம் ஆசாத்தின் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
2023 டிச.13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்டு, கைதான நீலம் ஆசாத் என்ற பெண் 'போலீஸ் காவல் சட்டவிரோதம்' என்று கூறி விடுதலை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்றத்தில் வழக்கறிஞருடன் ஆலோசிப்பதற்கு நீலம் ஆசாத் அனுமதிக்கப்படவில்லை என்று கூறி தொடரப்பட்டுள்ள மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி சுரேஷ் குமார் கைத் தலைமையிலான அமர்வு கூறியது.
மனுதாரர் ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே தற்போதைய மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது. என்று நீதிபதி மனோஜ் ஜெயின் கூறினார்.
நீலம் ஆசாத்தின் வழக்கறிஞர் வாதாடுகையில், “விசாரணை நீதிமன்ற நடைமுறைகளின்போது அவரது விருப்பத்திற்கிணங்க வழக்கறிஞருடன் அவர் ஆலோசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே அவரது அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் அவரை விடுவிக்க வேண்டும்.” என்று கூறினார்.
அப்படி எந்த வித அடிப்படை உரிமையும் மறுக்கப்படவில்லை. விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லுங்கள். அங்கு உங்களது வழக்கு நிலுவையில் உள்ளது.” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.