2023ஆம் ஆண்டு புதுப்புது மோசடிகள் அரங்கேறி முடிந்த நிலையில், 2024ஆம் ஆண்டும் அதற்கொன்றும் குறையில்லை என்று சொல்லும் அளவுக்குச் செல்லும்போல்தான் தெரிகிறது.
மின் கட்டணம் செலுத்துங்கள், வங்கிக் கணக்கை இணையுங்கள், ஓடிபி சொல்லுங்கள் என விதவிதமாக ஏராளமானோரை தங்கள் வலையில் வீழ்த்தி பல லட்சம் பல கோடி ரூபாய்களை சுருட்டிக்கொண்டிருக்கிறார்கள் சைபர் மோசடியாளர்கள்.
ஒரு மோசடி நடந்து அது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குள் புதிய மோசடியை அரங்கேற்றிவிடுகிறார்கள். அந்த வகையில், புணேவைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், சமூக வலைத்தளப் பக்கத்தில் லைக் போட்டதால், ரூ.20.32 லட்சத்தை இழந்துள்ளார்.
அவினாஷ் என்ற 40 வயது மென்பொருள் பொறியாளர், இணையதளத்தில் வீட்டிலிருந்தே சம்பாதிக்கும் செயலியை 2023ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் வரும் சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு லைக் போடும் வேலையை செய்து மாதந்தோறும் கணிசமாக பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
அவர்கள் மீது அவினாஷுக்கும் நம்பிக்கை வந்ததும், பணத்தைக் கொடுத்து சேர்ந்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை கூறியிருக்கிறார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அவினாஷிடமிருந்து ரூ.20.32 லட்சத்தை மோசடியாளர்கள் திருடியிருக்கிறார்கள். பிறகுதான் அவர் மோசடியாளர்களிடம் ஏமாந்ததை உணர்ந்திருக்கிறார்.
இது குறித்து காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார். காவல்துறையினர் இதுபற்றி கூறுகையில், இவர் இதுபோன்ற ஆன்லைன் டாஸ்க் மோசடியாளர்களிடம் ஏமாறும் முதல் நபர் அல்ல. இதுபோன்று கடந்த ஒரு சில மாதங்களாக நிறைய பேர் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பிட்ட தொகையை அவர்கள் போடும்போது அதற்கு நிறைய பணம் திரும்ப கிடைக்கும். இதனால் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு அதிக தொகையை கொடுப்பார்கள். அதனை திரும்ப எடுக்க முயற்சித்தால் ஒன்று மோசடியாளர்கள் இவரது இணைப்பைத் துண்டித்துவிடுவார்கள் அல்லது பணத்தை திரும்ப தர முடியாது என்று மிரட்டவும் செய்யவார்கள் என்கிறார்கள்.
எனவே, இதுபோன்ற ஆன்லைன் வேலை என்று சொல்லி வரும் மின்னஞ்சல், மெசேஜ், அழைப்புகளை எடுக்க வேண்டாம் எனவும், அனைத்து விதமான மோசடிகள் குறித்தும் அறிந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.