புதுதில்லி: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா தனது ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை காங்கிரஸில் இணைத்தார்.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா காங்கிரஸில் இணைந்துள்ளார்.
கடந்த ஓராண்டாக காங்கிரஸில் இணைவது குறித்து ஷர்மிளாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த செப்டம்பர் மாதமே ஹைதராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸில் ஷர்மிளா இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே, தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஷர்மிளாவின் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சி போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவளித்தது.
இந்த நிலையில், புதுதில்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை நேரில் சந்தித்து தனது ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியை காங்கிரஸில் ஷர்மிளா இன்று இணைத்துக் கொண்டார்.
ஷர்மிளாவின் வருகை ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பலம் சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை ஷர்மிளா தொடங்கியது குறிப்பிடத்தக்கது.