பால்கர்: 2020 ஆம் ஆண்டு பால்கர் மாவட்டத்தில் நடைபெற்ற கும்பல் தாக்குதலில் பலியாகிய இரண்டு சாதுக்கள் உள்பட மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சத்துக்கான காசோலையை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வழங்கினார்.
சாதுக்கள் கல்பவிருக்ஷா மஹாராஜ், கிரி மஹாராஜ் மற்றும் நிலேஷ் டெல்ஹாடே ஆகியோர் கரோனா ஊரடங்கு நேரத்தில் கட்சிஞ்சலே என்கிற கிராமத்தைக் கடக்க முயன்றனர். அவர்களைத் திருடர்கள் என எண்ணி கும்பல் தாக்கியது.
பெரியளவில் பேசுபொருளான இந்த வழக்கில், 500 பேர் கொண்ட கும்பலில் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குக் காசோலையை அளித்த ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்திக்கவில்லை எனக் குற்ற சாட்டியுள்ளார். இந்த நிதியுதவியை சிவசேனை கட்சி அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.