விமான ஓடுதளத்தில் சாப்பிட்ட பயணிகள்: இண்டிகோ நிறுவனத்துக்கு நோட்டீஸ்

மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 
படங்கள்: எக்ஸ்
படங்கள்: எக்ஸ்


மும்பை விமான நிலைய ஓடுதளத்தில், விமான பயணிகள் அமர்ந்து சாப்பிட்ட சம்பவம் தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 

மேலும், மூடுபனி தொடர்பாக ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்ளவும், விமான நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்வதிலும் இண்டிகோ மற்றும் மும்பை விமான நிலையம் இரண்டுமே கவனத்துடன் செயல்படவில்லை என்றும் அமைச்சகம் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டிருக்கிறது.

தில்லியில் ஏற்பட கடும் பனி மூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜன.14) அன்று 150க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணிநேர தாமத்துக்குப் பின்பே இயக்கப்பட்டன. சென்னை, பெங்களூரு, கேரளத்திலிருந்து கிளம்பும் விமானங்களும் பனியால் திட்டமிட்ட நேரத்திற்கு இயக்க முடியாமல் பாதிக்கப்பட்டன. 

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு தில்லியிலிருந்து கோவா செல்லவேண்டிய இண்டிகோ விமானம் சில மணி நேரமாகக் கிளம்பாமல் இருந்தது. இதனால் கோபமடைந்த பயணி ஒருவர் விமானியை தாக்கியுள்ளார்.

பின் மீண்டும் இதே விமானம் கோவாவில் இருந்து தில்லி சென்ற நிலையில் அடர்ந்த மூடுபனி காரணமாக மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ 6இ 2195 விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறங்கிய வேகத்தில் ஓடுதளத்துக்கு அருகில் உள்ள டார்மாக் (விமானங்கள் நிறுத்தும் இடம்) பகுதியில் அமர்ந்தபடி உணவும் உண்டனர். இந்த காட்சி இணையத்தில் விடியோவாக வெளியாகி வைரலானது. இந்தச் சூழலில் இது குறித்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம் மற்றும் இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் கொடுத்திருந்தது.

கோவாவில் இருந்து தில்லி செல்ல வேண்டிய அந்த விமானம் குறித்த நேரத்தில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. தில்லியில் நிலவிய மூடுபனி காரணமாக மும்பைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மும்பையில் விமானத்துடன் படிகள் இணைக்கப்பட்ட நிலையில் பயணிகள் அதில் இருந்து வெளியேறிய நிலையில் ஓடுதளத்துக்கு அருகில் விமானம் நிறுத்தப்பட்ட டார்மாக் பகுதியில் அமர்ந்துள்ளனர். அந்த இடத்துக்கு விரைந்த பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளை அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற முயற்சித்துள்ளனர். ஆனால், அதில் தோல்வியை தழுவினர் என விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்திருந்தார்.

மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதாகவும். இதற்கு தங்கள் பயணிகளிடம் இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com