அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட பின்பு அங்கு சென்று தரிசனம் செய்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நிராகரித்தது.
இதையும் படிக்க | ராஜஸ்தான் முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சிறைக் கைதி!
இந்நிலையில் ராமர் கோயில் குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், “ராமர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ராமரை தரிசனம் செய்ய எங்களுக்கு அழைப்பு தேவையில்லை.
இந்து மத சாஸ்திரங்களின்படி, முழுமையாக கட்டிமுடிக்கப்படாத நிலையில் உள்ள கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடியாது. மேலும், பாஜக, விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இதனை ஒரு அரசியல் நிகழ்வாகவே மாற்றிவிட்டனர்.
அதனால் இந்த நிகழ்வில் எந்த சங்கராச்சாரியாரும் பங்கேற்கப் போவதில்லை. எந்த துறவியும் கலந்துகொள்ளப் போவதில்லை.
அயோத்தியில் ராமர் கோயில் முழுமையாக முடிக்கப்பட்ட பின்பு நாங்கள் அங்கு சென்று தரிசனம் மேற்கொள்வோம்.” என்று அவர் தெரிவித்தார்.