ஜன.19 முதல் ஜன.26 - விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?
நாட்டின் குடியரசு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு தில்லி பன்னாட்டு விமான நிலையம், விமான சேவை தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் ஜன.19 முதல் ஜன.26 வரை குறிப்பிட்ட நேரத்தில் விமானங்களுக்குத் தரையிறங்க மற்றும் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 10.20 மணி முதல் பிற்பகல் 12.45 வரை விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு நாளின் கொண்டாடத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தங்களின் மாற்றியமைக்கப்பட்ட விமான நேரத்தை விமான நிறுவனங்களில் தெரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜன.26 காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை தில்லி விமான நிலையத்தில் எந்தவித விமான சேவையும் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராணுவ விமானங்கள், எல்லை பாதுகாப்பு படை விமானங்கள், மாநில அரசின் முதல்வர்கள், ஆளுநர்கள் பயன்படுத்தும் விமானங்கள்/ ஹெலிகாப்டர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
இந்தாண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.