கேரளத்தில் கண்ணூர்-ஆலப்புழ எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதால் ரயில் தாமதமாக புறப்பட்டது.
கேரள மாநிலம், கண்ணூர் யார்ட்டில் இருந்து இன்று அதிகாலை நடைமேடைக்கு கொண்டு வரப்பட்ட போது கண்ணூர்-ஆலப்புழ எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் திடீரென தடம்புரண்டன.
உடனடியாக ரயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட இரண்டு பெட்டிகளை அப்புறப்படுத்தினர்.
இதன் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் காலை 5.10க்கு பதில் ஒரு மணிநேரம் தாமதமாக 6.43 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்நிகழ்வின் போது பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.
ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தை கண்டறிய ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.