கேரள மாநிலம் வயநாட்டில் வயதுவந்த சோம்பல் கரடி ஒன்று கடந்த மூன்று நாள்களாக சுற்றித் திரிகிறது. வீடு ஒன்றிற்குள் புகுந்த அந்தக் கரடி சர்க்கரையைத் திருடி சாப்பிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி 21ல் இந்தக் கரடி வனப்பகுதிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்துள்ளது. அதன் நடமாட்டம் அந்தப் பகுதியில் உள்ள பல சிசிடிவி காணொலிகளில் பதிவாகியுள்ளது.
இதுவரை அந்தக் கரடி யாரையும் காயப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் புகுந்து சர்க்கரையை சாப்பிட்ட கரடி, மக்கள் சத்தமெழுப்பி பயமுறுத்தியதும் பயந்து வயல்வெளிக்குள் ஓடி மறைவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க: அகமதுநகரில் பயங்கர விபத்து: 6 பேர் பலி!
அந்தக் கரடியின் நடமாட்டம் கடைசியாக புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பணமரம் பகுதியில் பதிவாகியுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 'கரடி மீண்டும் வனப்பகுதிகளுக்குள் சென்றுவிடும் என நம்புகிறோம். எனினும் அவசர உதவிக்குழு, கால்நடை மருத்துவர்கள் போன்றவர்களை உள்ளடக்கிய குழு தயாராக உள்ளது.' என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
'கரடியை மயக்க மருந்து துப்பாக்கி மூலம் அமைதிப்படுத்த தலைமை வனவிலங்கு காப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்' என மூத்த வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.