பிகாரில் ஆளும் மகா கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், சுமார் ஒன்றரை ஆணடுகளுக்குப் பின் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.
72 வயதாகும் நிதீஷ்குமார், பிகார் முதல்வராக பதவியேற்பது இது 9வது முறையாகும்.
பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கைகோர்த்திருப்பதன் மூலம், பிகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமானதாக மாறவும், இந்தியா கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்படவும் காரணமாக அமைந்துவிட்டது.
முந்தைய மகா கூட்டணியை விடவும் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஐக்கிய ஜனதா தளம் இணைந்திருப்பதை தான், யாதவர் அல்லாத ஓபிசி பிரிவினர், உயர் வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், பாஸ்வான் சமுதாயத்தினர், முஸாஹர்கள், இதர தலித் பிரிவினர் அதிகம் விரும்புவார்கள் என்று மாநில அரசியல் நிலவரம் சொல்கிறது.
அதாவது, இந்தியா கூட்டணியிலிருந்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விலகியிருப்பதால், பிகாரைப் பொறுத்தவரை இந்தியா கூட்டணி முஸ்லிம் - யாதவ் சமுதாயத்தினருக்கானதாக மாறிவிட்டது.
பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் சேர்ந்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்பட்டாலும், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைப் போல மீண்டும் நிகழும் என்று கட்சி உறுப்பினர்கள் சார்பில் கணிக்கப்படுகிறது.
இதையும் படிக்க.. சங்கி கெட்ட வார்த்தையில்லை : ரஜினிகாந்த்
மக்களவைத் தேர்தலில் பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவே, பாஜக தலைவர்கள் கருதுகிறார்கள். இது பற்றி பாஜக தேசிய தலைவர் நட்டா கூறுகையி, பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் இயற்கையாகவே அமைந்த கூட்டணிக் கட்சிகள். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் ஆட்சியமையும் போது நாட்டின் வளர்ச்சி மேம்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூட்டணியிலிருந்து விலகிய நிதீஷ் குமாரை மீண்டும் சேர்த்துக் கொள்ள பாஜகவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்தான் இருந்துள்ளன. அதாவது ஒன்று பிகாரில் மக்களவைத் தேர்தல் வெற்றி, மற்றொன்று, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய பின்னடைவு போன்றவைதான்.