காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம், பிகாருக்குள் திங்கள்கிழமை நுழைந்தது.
நாட்டில் கிழக்கில் இருந்து மேற்காக 6,713 கி.மீ. தொலைவுக்கு ராகுல் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். மணிப்பூரில் இருந்து கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இப்பயணம், மேற்கு வங்கத்தை கடந்த 25-ஆம் தேதி எட்டியது.
2 நாள்கள் ஓய்வுக்கு பிறகு இம்மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கினாா் ராகுல்.
ஞாயிற்றுக்கிழமை சிலிகுரி அருகே நிறைவடைந்த அவரது பயணம், திங்கள்கிழமை கிஷன்கஞ்ச் வழியாக பிகாா் மாநிலத்துக்குள் நுழைந்தது. அப்போது அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, 31-ஆம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
பிகாரில் ஞாயிற்றுக்கிழமை ஆட்சி மாற்றம் நிகழ்ந்த நிலையில், ராகுலின் நடைப்பயணம் அந்த மாநிலத்துக்குள் நுழைந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.