ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல்முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, ராஞ்சி இல்லத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரனிடம் இன்று பகல் 1.30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே, தில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ள நிலையில், இன்றைய விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் நடத்தி வருவதால், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீடு, ஆளுநர் மாளிகை மற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு 100 மீட்டர் தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.