ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால், அவரது மனைவி கல்பனாவை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், கடந்த வாரம் முதல்முறையாக வீட்டிலேயே வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, மீண்டும் ஜன. 29 முதல் 31-ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, ராஞ்சியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு இன்று பிற்பகல் ஹேமந்த் சோரன் ஆஜராகவுள்ளார்.
இதற்கிடையே, தில்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், ஆவணங்கள் சிலவற்றையும் அமலாக்கத்துறை கைப்பற்றினர்.
இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள வீட்டில் ஹேமந்த் சோரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவரது மனைவியை முதல்வராக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் கல்பனாவும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
ஜார்கண்ட சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாததால், கல்பனா முதல்வராக பதவியேற்கும் பட்சத்தில் அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.