ஜிஎஸ்டியால் வீட்டு உபயோக பொருள்கள் மீதான வரி குறைப்பு: மத்திய நிதியமைச்சகம்
வீட்டு உபயோக பொருள்கள் மீதான வரி விதிப்பை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. இதன் ஏழாம் ஆண்டையொட்டி, மத்திய நிதியமைச்சகம் ‘எக்ஸ்’ தளத்தில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு கதவுகள், மேஜைகள், அறைகலன்கள், மெத்தைகள் உள்ளிட்டவை மீது 28 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டது. தற்போது அவற்றின் மீது 18 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படுகிறது.
இதேபோல ஜிஎஸ்டி அமலுக்கு முன்பு கைப்பேசிகள், 32 அங்குல தொலைக்காட்சிகள், குளிா்சாதனப் பெட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்டவை மீது 31.3 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. அவற்றின் மீது தற்போது 18 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
வீட்டு உபயோக பொருள்கள் மீதான வரி விதிப்பை ஜிஎஸ்டி குறைத்துள்ளது. அந்தப் பொருள்கள் மற்றும் கைப்பேசிகள் மீதான குறைந்த ஜிஎஸ்டி விதிப்பால் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.