
நிகழ் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 2) நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி முக்கிய தலைவரும் சமாஜவாதி கட்சி எம்.பி.யுமான அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் வென்றாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எதிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
”மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது கடந்த காலத்திலும், இப்போதும் நம்பிக்கையில்லை என்றும், இனி வருங்காலத்திலும் நம்பிக்கையில்லை நம்பிக்கை வராது என்றும், பெரும்பான்மை இடங்களில் வெற்றி கிட்டினாலும் அவற்றின் மீதான நம்பிக்கை ஏற்படாது” எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, ”இவிஎம்களை வெளியேற்றவே, இவிஎம்கள் மூலம் நடத்தப்படும் தேர்தலில் வெல்வதை நாங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம்” எனக் குறிப்பிட்டு பேசியதையும் மக்களவையில் நினைவு கூர்ந்து பேசினார் கன்னோஜ் தொகுதி எம்.பி. அகிலேஷ் யாதவ்.
”தேர்தல் நடைமுறைகளிலிருந்து நீக்கப்படும் வரை இவை குறித்த சர்ச்சை நீடிக்கும். அதை சமாஜவாதி கட்சி தொடர்ந்து வலியுறுத்தும்.
மத்திய அரசின் நடவடிக்கைகளால் இந்திய தேர்தல் ஆணையம் குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டால், இந்தியாவின் ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், உலகளவில் அதிக திறன் வாய்ந்த ஜனநாயகமாக மாறும்” என்றார்.
”உத்தர பிரதேசத்தில் உள்ள பல கிராமங்கள் பிரதமர் மோடியால் தத்தெடுக்கப்பட்டன. ஆனால் களத்தில் இன்னும் நிலவரம் மாறவே இல்லை. அங்கே தண்ணீர் வசதி இல்லை, சாலைகள் மோசமாக உள்ளன, மக்களுக்கு சமையல் எரிவாயு உருளைகள் கிடைப்பதில்லை. இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அரசு, ஸ்மார்ட் நகரத் திட்டம் போன்ற பொய்யான வாக்குருதிகளை அளித்துள்ளது” என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார் அகிலேஷ் யாதவ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.