
பரோல் வழங்கப்பட்டுள்ள காலிஸ்தான் ஆதரவாளரும், சீக்கிய மதபோதகருமான அம்ரித்பால் சிங் மற்றும் காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல் ரஷீத் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலம் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் வாரிஸ் பஞ்சாப் தே கட்சி சார்பில் சுயேட்சையாக போட்டியிட்டு 1.97 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அம்ரித்பால் சிங் வெற்றி பெற்றார்.
தேர்லின்போது அவர் அசாம் மாநிலத்தின் திப்ருகர் சிறையில் இருந்தார். சிறையில் இருந்தவாறே தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். பொறியாளர் ரஷீத் சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத நிதி வழக்கில் தில்லியின் திகார் சிறையில் இருந்தார்.
இந்த நிலையில், பலத்த பாதுகாப்புடன் நாடாளுமன்ற வளாகத்திற்கு அழைத்துவரப்பட்ட அம்ரித்பால் சிங் மற்றும் ஷேக் அப்துல் ரஷீத், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லாவின் முன்பு பதவியேற்றனர்.
பதவியேற்பதற்காக, ரஷீத்துக்கு திகாரிலிருந்து நாடாளுமன்றத்துக்குப் பயண நேரத்தைத் தவிர்த்து இரண்டு மணி நேர காவலில் பரோலும், சிங்குக்கு ஜூலை 5 முதல் அசாமில் இருந்து தில்லி திரும்பும் பயணத்தைக் கருத்தில் கொண்டு நான்கு நாள் பரோலும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.