
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வன்முறையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அடிக்கடி ஊக்குவிப்பதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் பென்ஸில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயம் அடைந்தார்.
இச்சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனை மறுபதிவு செய்து பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா குறிப்பிட்டுள்ளதாவது,
''ராகுல் கூறுவது பொய்யான வார்த்தைகள். மூன்றாவது முறையாக தோல்வியடைந்த ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிரான வன்முறையை அடிக்கடி ஊக்குவித்து அதனை நியாயப்படுத்தினார். இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு பலமுறை அதனைச் செய்துள்ளார்.
அப்போது காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாப் காவல்துறை, பிரதமரின் பாதுகாப்பில் வேண்டுமென்றே சமரசம் செய்ததையும், பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதையும் இந்தியாவால் எப்படி மறக்க முடியும்'' எனப் பதிவிட்டுள்ளார்.