
வங்கதேசத்தில் வன்முறை நிலவிவருவதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த 14 மருத்துவ மாணவர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அங்கு கல்வி பயின்று கொண்டிருக்கும் இந்திய மாணவர்கள் உடனடியாக இந்தியா திரும்பும்படி மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்களை மீட்டு இந்தியா அழைத்து வர மாநில அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
வங்கதேசத்தில் வன்முறை நிலவிவருவதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கண்டறிய உதவுமாறு மாநில அரசு நிறுவனமான என்ஆர்ஜி அறக்கட்டளைக்கு முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டார்.
அதையடுத்து என்ஆர்ஜி அறக்கட்டளை மாணவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க உதவி எண்களை அமைத்தது. அதன்படி, திங்கள்கிழமை நிலவரப்படி 14 மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.
தாயகம் திரும்பியவர்களில் 7 பேர் பருச், அகமதாபாத் மற்றும் பாவ்நகரில் இருந்து தலா இரண்டு பேர், அம்ரேலி, மெஹ்சானா மற்றும் பதான் மாவட்டங்களிலிருந்து தலா ஒருவர் ஆவர். மேலும் அண்டை நாட்டில் 11 மாணவர்களை அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளூர் பயணங்களைத் தவிர்க்குமாறும், வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக வங்கதேசத்தில் உள்ள மாணவர்கள் உள்பட 400 பேர் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.