
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை சந்தித்தார்.
தில்லியின் உள்ள கேஜரிவாலின் இல்லத்திற்கு வந்த அவரை சுனிதா கேஜரிவால் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து மம்தா, கேஜரிவாலின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றார். இந்த சந்திப்பின் போது ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி ராகவ் சதாவும் உடனிருந்தார்.
அதேசமயம் மம்தாவுடன் அபிஷேக் பானர்ஜியும் சென்றிருந்தார். இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சி தனது எக்ஸ் தளத்தில், சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்தியா ஒன்றுபட்டுள்ளது. தில்லி முதல்வர் கேஜரிவாலின் இல்லத்திற்கு வந்து அவரது குடும்பத்தினரை மம்தா பானர்ஜி சந்தித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23ஆம் தேதியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருந்தார். தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் உள்ளிட்டோர், நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.
அதாவது, நாளை (ஜுலை 27) நடைபெறவுள்ள நீதி ஆயோக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இருப்பினும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நாளைய நீதி ஆயோக் கூட்டத்தில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கொல்கத்தாவில் இருந்து தில்லி புறப்பட்டு வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.