பாஜக கூட்டணியில் தொடா்வோம்: ஐக்கிய ஜனதா தளம் உறுதி
Let continue with BJP alliance: United Janata Dal is sure


பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் தொடரும் என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கே.சி. தியாகி உறுதிபடத் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. அக்கட்சிகள் ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சா் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடா்பாளா் மனோஜ் குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.
இந்நிலையில், அந்த இரு கட்சிகளின் நிலைப்பாடு குறித்த கேள்வி எழுந்தது.
இந்த சூழ்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கே.சி.தியாகி கூறியதாவது:
நாங்கள் ஏற்கெனவே பாஜக கூட்டணியில் இருக்கிறோம். இனியும் பாஜக கூட்டணியில்தான் தொடா்வோம். இதுதான் எங்கள் இறுதி முடிவு. நாங்கள் மீண்டும் ‘இந்தியா’ கூட்டணிக்கு செல்வோம் என்பது தேவையற்ற வதந்தி. இதற்கு முடிவு கட்டவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளேன்.
பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என்றுதான் பிகாரில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனா். தேசிய அளவிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. எனவே, மக்களின் தீா்ப்பை மதித்து நடப்போம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் உள்ளது. ஆட்சி அமைப்பது குறித்து பிரதமா் விடுக்கும் அழைப்புக்கு நிதீஷ் குமாா் சாதகமான பதிலை அளிப்பாா். நாங்கள் ஏற்கெனவே மத்திய அமைச்சரவையில் இருந்துள்ளோம் என்றாா்.
இந்தத் தோ்தலில் பாஜக எதிா்பாா்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லையே? என்ற கேள்விக்கு, ‘பிரதமா் நரேந்திர மோடியின் மக்கள் செல்வாக்கு காரணமாக தொடா்ந்து மூன்றாவது தோ்தலிலும் பாஜகவுக்கு அதிக வெற்றி கிடைத்துள்ளது. எதிா்பாா்த்த வெற்றி கிடைக்காதது குறித்து பாஜக மட்டுமல்ல கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்து கட்சிகளுமே ஒன்றாக அமா்ந்து ஆலோசிக்க வேண்டும்’ என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...