
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகம், மணிப்பூர், புதுச்சேரி உள்பட 9 மாநிலங்களில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தனிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையிலும் 240 இடங்களை கைப்பற்றியது. அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியது பாஜக. தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், தனது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் கைகோத்து, மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அது தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் புள்ளிவிவரங்களுடன் வெளியாகி வருகிறது.
மும்பையில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர், இந்தூரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர் என பல்வேறு தகவல்களைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே தமிழகம், மணிப்பூர், பஞ்சாப், சிக்கிம், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, சண்டிகர், புதுச்சேரி என 9 மாநிலங்களில் ஓரிடத்தில் கூட நாட்டை ஆளவிருக்கும் பாஜக வெல்லவில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. தமிழகத்தில் 39 மற்றும் புதுச்சேரியில் ஒன்று என 40க்கு 40 தொகுதிகளையும் திமுக எனும் மாபெரும் மாநிலக் கட்சி வாரிசுருட்டிக்கொண்டது. தமிழகத்தில் தனது ஆதிக்கத்தை திமுக இந்த வெற்றியின் மூலம் மீண்டும் பதிவு செய்திருக்கிறது.
அதுபோல, பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 7 தொகுதிகளை காங்கிரஸ் கட்சியும் 3 தொகுதிகளை ஆம் ஆத்மியும் ஒரு தொகுதியை ஷிரோமணி அகாலி தளமும் கைப்பற்ற, மற்ற இரண்டு தொகுதிகளிலும் பிற கட்சியினர் வெற்றியை பதிவு செய்து, பாஜகவுக்கு பூஜ்யத்தையே அளித்துள்ளது பஞ்சாப்.
பாஜகவின் எதிர்ப்பு அலை அதிகம் வீசிய மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்றாக இருந்தது. ஆனால் இங்கிருந்ததோ இரண்டு தொகுதிகள் இரண்டிலும் காங்கிரஸ் வென்று, பாஜகவுக்கு தோல்வி முகத்தை பரிசளித்தது. இதே நிலைதான் சிக்கிமிலும். சிக்கிமில் இருந்த ஒரே ஒரு தொகுதியை சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா வென்றுள்ளது. ஆனால் இது பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் என நம்பப்படுகிறது.
மேகாலயமும் இரண்டு தொகுதிகளான துராவை காங்கிரஸ் கட்சிக்கும், மற்றொன்றான ஷில்லாங்கை மக்கள் குரல் கட்சிக்கும் கொடுத்துவிட்டது.
மிசோரமில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை சோரம் மக்கள் இயக்கம் வேட்பாளர் ரிச்சர்ட் கைப்பற்றினார். நாகாலாந்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியது. சண்டிகரிலும் ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்ற, நாடு முழுவதும் மக்களவைத் தொகுதியை பாஜகவுக்குக் கொடுக்காத மாநிலங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
மொத்தம் 543 தொகுதிகள் உள்ள நிலையில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பாஜக தனித்து 240 தொகுதிகளிலும், அதன் தலைமையிலான என்டிஏ கூட்டணி 292 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.