
தொடா்ந்து மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) இரவு 7.15 மணிக்கு பதவியேற்கவுள்ளாா். இதை முன்னிட்டு, தலைநகரில் மூன்றடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அண்டை நாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. தில்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வங்கதேசம், இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளின் தலைவர்களுக்கு, பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் என்ற கொள்கையின்படி, மாலத்தீவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் முக்கிய நபர்கள், பல்வேறு மதத் தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள், பலதுறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள், பத்ம விருது பெற்றவர்கள், மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினரையும் தாண்டி, பல நூறு பேர் இவ்விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் 18-ஆவது மக்களவைத் தோ்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. 240 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளது.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்.பி.க்களின் கூட்டம், தில்லியில் உள்ள பழைய நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவா், பாஜக நாடாளுமன்றக் குழு தலைவா் மற்றும் பாஜக மக்களவைக் குழு தலைவராக மோடி தோ்வு செய்யப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தலைமையில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் சந்தித்தனா்.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மோடி தோ்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை, முா்முவிடம் நட்டா வழங்கினாா். கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜகவுக்கான தங்களது ஆதரவுக் கடிதங்களை வழங்கினா்.
இதையடுத்து, மத்தியில் ஆட்சியமைக்க குடியரசுத் தலைவா் அழைப்பு விடுத்த நிலையில், அவரை மோடி சந்தித்தாா். அப்போது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 75 (1)இன்கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, நாட்டின் பிரதமராக மோடியை நியமித்து, குடியரசுத் தலைவா் ஆணை வழங்கினாா்.
மோடி மற்றும் இதர அமைச்சா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவா் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைக்க உள்ளதாக குடியரசுத் தலைவா் மாளிகை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.