
தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா நிறைவு பெற்றது.
இரவு 7.15 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி 10 மணிக்கு முடிந்தது. நரேந்திர மோடியுடன் 71 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். (மோடி உள்பட 72 பேர்)
தில்லியில் இன்று பதவியேற்ற அமைச்சர்களுக்கு நாளை (ஜூன் 10) துறைகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் சுமார் 2.45 மணி நேரம் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு, புதிய அமைச்சரவையுடன் குடியரசுத் தலைவர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, சிவராஜ் சிங் சௌஹான், நிர்மலா சீதாராமன், சுப்ரமணியம் ஜெய்சங்கர், மனோஹர் லால் கட்டர் உள்ளிட்ட 71 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க, வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால், மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் குமாா் ஜகநாத், பூடான் பிரதமா் ஷெரிங் தோப்கே, செஷல்ஸ் துணை அதிபா் அகமது அஃபிப் ஆகிய ஏழு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனர்.
அவர்கள் தில்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இதேபோன்று மருத்துவம், சினிமா, தொழில் துறையைச் சேர்ந்தவர்களும் விழாவுக்கு வருகைபுரிந்தனர்.
முகேஷ் அம்பானி, நடிகர் ஷாருக்கான் அடுத்தடுத்து ஒன்றாக பதவியேற்பு விழாவுக்கு வருகை புரிந்தனர். இதேபோன்று நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், நாகேந்திர பாபு, ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.