

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தல் கடந்த வியாழக்கிழமை (பிப். 12) நடைபெற்றது. மாணவா்கள் போராட்டத்துக்குப் பின்னா் முதல்முறையாக நடத்தப்பட்ட இந்தத் தோ்தலில் வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) அமோக வெற்றி பெற்றது.
299 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் 59.44 சதவீத வாக்குகள் பதிவாகின. பெரும்பான்மைக்குத் தேவையான 151 தொகுதிகளைத் தாண்டி, 209 தொகுதிகளில் பிஎன்பி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு நெருக்கமான கட்சி என்று அறியப்படும் அடிப்படைவாத கட்சியான ஜமாத்-ஏ-இஸ்லாமி 68 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மறைந்த முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகனும் பிஎன்பி தலைவருமான தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார். இவ்விழா வங்கதேச நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (பிப். 17) பிற்பகல் நடைபெறும் என்று பிஎன்பி கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவுக்கு இந்தியா உள்பட சீனா, சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான், ஐக்கிய அரபு ஆமீரகம், கத்தார், மலேசியா, புரூனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு, பூடான் ஆகிய 13 நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாலும், இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துக்கள் வங்கதேசத்தில் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதாலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் சுமூகமற்ற தன்மை நிலவுகிறது.
இந்நிலையில், வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பங்கேற்பார் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.