
அமர்நாத் யாத்திரை வருகிற ஜூன் 29 அன்று தொடங்குவதைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்ட கம்பெனிகளைச் சேர்ந்த மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) வீரர்களை பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஜம்மு காஷ்மீருக்கு வரவழைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சகம், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் நடத்தியக் கூட்டத்தில் பாதுகாப்புத் தேவைகள் குறித்து ஆலோசித்து, 500-க்கும் மேற்பட்ட சிஏபிஎஃப்-ஐ சேர்ந்த கம்பெனிகளான, சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், ஐடிபிபி மற்றும் சிஐஎஸ்எஃப்- இல் இருந்து வீரர்களை அமர்நாத் யாத்திரை நடைபெறும் பாதைகளில் பாதுகாப்பில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டதாகவும், தேவையான குழுக்கள் பஞ்சாபிலிருந்து ஜம்முவுக்கு செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிஏபிஎஃப்-ன் 500 பட்டாலியன்களைத் தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்களும், பனி மற்றும் பனிச்சரிவு ஆய்வு நிறுவனம் போன்ற சிறப்புப் படைகளையும் இதில் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அமர்நாத் யாத்திரைப் பாதைகளில் தாக்குதல்களைத் தடுக்க பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்கள் நிறுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதல்களயடுத்து அங்குள்ள பாதுகாப்பு நிலைமையை ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூன் 16) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், அதில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த விரிவான வழிகாட்டுதல்களை வழங்குவார் என்றும், ஜூன் 29 அன்று தொடங்கவுள்ள அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதிப்பாய்வு செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பில் முழு பலத்தையும் பயன்படுத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.