வயநாடு மக்களுக்கு நம்பிக்கை துரோகம்! பா.ஜ.க. விமர்சனம்
வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்யவுள்ளதன் மூலம், ராகுல் காந்தி தனது தொகுதி மக்களுக்கு நம்பிக்கைு துரோகம் செய்துள்ளதாக கேரள பாஜக தலைவரும், வயநாட்டில் ராகுலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றவருமான கே. சுரேந்திரன் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு பொறுப்பை ராஜிநாமா செய்வதாக இன்று (ஜூன் 17) அறிவித்தார். அங்கு தனது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாகவும் கூறினார்.
இதனிடயே இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கே. சுரேந்திரன், ''நிரந்தரமாக காணாமல்போன எம்.பி. என்ற பாஜகவின் கணிப்பு உண்மையாகியுள்ளது. இறுதியில் வயநாடு தொகுதியை காலிசெய்ய ராகுல் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் வயநாடு மக்களின் நம்பிக்கைக்கு அவர் துரோகம் இழைத்துள்ளார்.
கேரளத்தை அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே ராகுல் காந்தியும், காங்கிரஸும் பயன்படுத்துகிறது. வயநாடு என் இரண்டாவது வீடு என அவர் பொய்யுரைத்துள்ளார்.
கேரள மக்களின் நேர்மையும் அன்பும், சுரண்டுபவர்கள் - கைவிடுபவர்களை - விட சிறந்த பிரதிநிதிக்கு தகுதியானவை. கேரளத்தை வாக்கு சேகரிக்கும் ஏடிஎம் இயந்திரமாக மட்டுமே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது என அவர் விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.