
தில்லியில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் இன்று (ஜூன் 19) தாமதமாகின.
கோடை காலம் முடிந்த பின்னரும் தில்லியில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பத்தைத் தணிக்கும் வகையில் மாநகரம் முழுவதும் டேங்கர் லாரிகளில் தெளிப்பான்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடும் வெயில் காரணமாக விமானங்கள் தாமதமாகின.
அதிக வெப்பம் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் நெறிமுறைகளின்படி விமான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெப்பக் காற்றின் வீச்சு குறையும் வரை சிலமணிநேரங்கள் விமானம் தாமதமாவதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு அதிகாரி, ''காலநிலை மோசமாக உள்ளபோது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்த பிறகே விமானங்களை இயக்க முடியும். விமானம் புறப்படும்போது காற்றின் அடர்த்தியில் மாற்றங்கள் இருந்தால், அது சுமூகமான இயக்கத்தை பாதிக்கும். விமானம் புறப்படும்போது அதிக வெப்பக்காற்று வெளியேறும். மற்றொரு வாய்ப்பாக எரிபொருளைக் குறைப்பதன்மூலம் விமானங்களை இயக்க வாய்ப்புள்ளது.'' என்றார்.
தில்லி - பாக்தோதரா இடையிலான இன்டிகோ நிறுவனத்தைச் சேர்ந்த பயணிகள் விமானம், ஜூன் 17ஆம் தேதி அதிக வெப்பத்தின் காரணமாக தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதேபோன்று விமானத்தில் குளிரூட்டிகள் சரியாக இயங்குவதில்லை என்ற புகாரும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட விமானத்தில் குளிரூட்டி இல்லாமல் கடும் வெக்கையில் பயணிகள் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
விமானத்திற்கு வெளியே வெப்பம் அதிகமாக இருந்ததே, விமானத்தில் உள்ள குளிரூட்டியின் செயல்திறன் குறைவாக உணரப்பட்டதற்கு காரணம் என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.