
ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை இன்னும் தொடங்காததால் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் வறண்ட சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அங்குள்ள மக்கள் மழை வருவதற்காக புதைத்த சடலங்களைத் தோண்டியெடுத்து எரித்து மழைக் கடவுளை அழைத்து வினோத வேண்டுதலைச் செய்து வருகின்றனர்.
இந்த மாவட்டத்தில் கிட்டத்தட்ட 3 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் சாகுபடிக்கு பருவமழையை நம்பியுள்ளது. அதனால், மழை பெய்யத் தவறினால் கழுதைகளுக்கு அல்லது பொம்மைகளுக்குத் திருமணம் செய்து வைப்பது, நிர்வானமாக ஊரைச் சுற்றி பிச்சை எடுப்பது போன்ற வினோதமான வேண்டுதல்களை இந்தப் பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
மேலும், வெண்புள்ளி பாதிப்படைந்தவர்களின் உடல்களைப் புதைத்தால் மழைக்காலம் தடைபடும் என்று நம்பும் இங்குள்ள மக்கள், கடந்த இரு வாரங்களாக, இறந்து புதைக்கப்பட்டவர்களில் வெண்புள்ளி பாதித்த 10 பேரின் உடல்களைத் தோண்டியெடுத்து, அந்த உடல்களுக்கு இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் முறைப்படி சடங்குகள் செய்து எரித்துள்ளனர்.
இதனால், மழைக்கடவுளின் ஆசியால் மழை மீண்டும் பெய்யத் தொடங்கும் என்று அந்த மக்கள் நம்புகின்றனர்.
இறந்தவர்களின் உடல்களைத் தோண்டியெடுப்பது மிகவும் தவறானது மற்றும் அருவருப்பானது என்ற போதிலும், ஊர் மக்களின் நன்மைக்காக இந்த விநோத நம்பிக்கைக்கு இறந்தவர்களின் குடும்பத்தினர் ஒத்துக் கொள்கின்றனர்.
ஆனால், தற்செயலாக இந்த வினோத வேண்டுதல்கள் முடிந்த பிறகு மழை பெய்துள்ளது. அந்தப் பகுதி வாசியான பசவராஜ் கூறுகையில், “இப்போது மட்டுமல்ல, இதற்கு முன்னரும் சடலங்களை எரிக்கும் வேண்டுதலால் மழை பெய்துள்ளது. இந்த வேண்டுதல்கள் நிறைவேறுவது புதிதில்லை” என்று கூறினார்.
எல்லாக் குடும்பங்களும் இறந்தவர்களின் சடலங்களைத் தோண்டியெடுக்க அனுமதிப்பதில்லை. சிலர், அனுமதி மறுத்தாலும் அந்தப் பகுதியினர் சேர்ந்து அவர்களிடம் பேசி சம்மதிக்க வைக்க முயற்சிக்கின்றனர். அங்குள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின், நான்கு மாதங்களுக்கு முன்பு இறந்த பாட்டியின் உடலை அனுமதி வாங்கி தோண்டியெடுத்து எரித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.