
புதுதில்லி: நீட் மற்றும் யுஜிசி நெட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டுக்கு வெளியே ரூபாய் நோட்டுகளை வீசி காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாட்னாவில் மாணவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இதற்கிடையே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கு தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட நெட் தேர்வில் முறைகேடு நடந்ததாக குறிப்பிட்டு தேசிய தோ்வுகள் முகமை புதன்கிழமை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்த சம்பவங்களால் நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சகத்துக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளன.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு வெளியே காங்கிரஸின் மாணவப் பிரிவினர் ரூபாய் நோட்டுகளை சாலையில் வீசி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர்.
இருப்பினும், சிறிது நேரத்தில் தில்லி காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நெட் தோ்வு ரத்து செய்யப்பட்டது லட்சக்கணக்கான மாணவா்களின் உணா்வுக்கு கிடைத்த வெற்றியாகும். அந்தத் தோ்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நீட் தோ்வு எப்போது ரத்து செய்யப்படும்? நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததற்கும், மத்திய அரசின் நோ்மையின்மைக்கும் பிரதமா் பொறுப்பேற்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.