கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய்(வயது 62) செவ்வாய்க்கிழமை காலை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அபிஜித் கங்கோபாத்யாய், இன்னும் 3 மாதங்களில் ஓய்வுபெற உள்ளார்.
இந்த நிலையில், தனது பதவியை நாளை காலை ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்த நகலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் அனுப்பிய பிறகு, செய்தியாளர்களிடம் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளிப்பதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பங்கேற்ற அபிஜித், நீதிபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும், எந்த கட்சியில் இணைவேன் என்று தற்போதைக்கு கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
வருகின்ற மக்களவைத் தேர்தலை கணக்கில் கொண்டு ராஜிநாமா செய்யும் அபிஜித், பாஜகவின் வேட்பாளராக களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு வங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் ஆள்சேர்ப்பில் நடந்த முறைகேடு வழக்கில் புகழ்பெற்றவர் அபிஜித்.
அபிஜித் கங்கோபாத்யாயின் அரசியல் வருகையை பாரதிய ஜனதா, திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளனர்.