பிரதமர் நரேந்திர மோடி அடுத்த 10 நாள்களில் 12 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு அரசு நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார்.
ஓரிரு வாரங்களில் மக்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்தக் கூடாது என்பதால், கடந்த சில நாள்களாக பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வரும் மோடி, மத்திய அரசின் திட்டங்களை தொடக்கி வைத்து வருவதுடன், பாஜகவின் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில், அடுத்த 10 நாள்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளும் 12 மாநிலங்களின் விவரங்கள்.
மார்ச் 4
தெலங்கானா மாநிலம் அடிலாபாத்தில் இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, பாஜகவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.
தொடர்ந்து, சென்னை வரும் மோடி, கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். அதன்பிறகு, சென்னை நந்தனத்தில் பாஜகவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மார்ச் 5
தெலங்கானா மாநிலம், சங்கரெட்டியில் காலையிலும், ஒடிஸா ஜெய்பூர் மாவட்டத்தில் மாலையிலும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மார்ச் 6
மேற்கு வங்கம் மாநிலம் பரசாத்தில் மத்திய அரசு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து, மாலை பிகார் மாநிலம் பெத்தையா செல்லும் மோடி, பல்வேறு அரசு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
மார்ச் 7
ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிறகு பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் மோடி பேசுகிறார்.
மார்ச் 8
தில்லியில் நடைபெறும் தேசிய படைப்பாளி விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, அன்று மாலை அஸ்ஸாம் மாநிலத்தில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மார்ச் 9
அருணாசலப் பிரதேசம் கிழக்கு கமெங்கில் கட்டப்பட்டு வரும் சேலா சுரங்கப்பாதையை மோடி திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அஸ்ஸாமில் லச்சித் பர்புகானின் சிலையை திறந்து வைக்கிறார்.
அங்கிருந்து மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி செல்லும் பிரதமர், பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மார்ச் 10
உத்தரப் பிரதேசம் மாநிலம் அஸாம்காரில் பல்வேறு மத்திய அரசின் திட்டங்களை பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார்.
மார்ச் 11
துவாரகா அதிவிரைவுச் சாலையின் ஹரியாணா பகுதியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் மோடி, மாலை டிஆர்டிஓவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
மார்ச் 12
குஜராத்தின் சபர்மதி செல்லும் மோடி, பிற்பகலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரானுக்கு செல்கிறார்.
மார்ச் 13
குஜராத் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.