பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில்(என்டிஏ) சேருமாறு தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக அழைப்பு விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன்பேரில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தலைநகர் தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்கள்.
இந்த சந்திப்பில் பாஜக-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு, தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்ததாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த 2018-ல் ஜனநாயகக் கூட்டணியின் உறவை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
வரும் தேர்தலை தெலுங்கு தேசம் கட்சி வலுவான கூட்டணி அமைத்து சந்திக்கவிருப்பதால் இது ஆந்திரத்தை ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துகின்றனர்.