2019, ஏப்ரல் முதல் இதுவரையிலும் பணமாக மாற்றப்பட்ட அனைத்துத் தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் பற்றிய விவரங்களைத் தர ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கேட்டு பாரத ஸ்டேட் வங்கி தாக்கல் செய்த மனுவை மீது உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த மனுவை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் நன்கொடை பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் எஸ்பிஐக்கு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“நரேந்திர மோடியின் நன்கொடை வியாபாரம் அம்பலமாகிறது. சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணத்தை நூறு நாள்களில் மீட்பதாக கூறி ஆட்சிக்கு வந்த அரசு, சொந்த வங்கியின் விவரங்களை மறைத்ததற்காக உச்சநீதிமன்றத்தில் தலைகுனிந்து நிற்கிறது.
இந்திய வரலாற்றின் மிகப் பெரிய ஊழலை தேர்தல் பத்திர விவரங்கள் நிரூபிக்கவுள்ளது. இது ஊழல் தொழிலதிபர்களுக்கும், அரசுக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தி, நாட்டு மக்கள் மத்தியில் மோடியின் உண்மையான முகத்தை வெளி கொண்டுவரவுள்ளது.
நன்கொடை கொடுத்தால், வியாபாரமும், பாதுகாப்பும் கிடைக்கும் என்பது தெளிவாக உள்ளது.
நன்கொடையாளர்களுக்கு நன்மைகளை செய்து, பொதுமக்கள் மீது வரிச்சுமையை ஏற்றுவதுதான் மோடியின் பாஜக அரசு.” என்று விமர்சித்துள்ளார்.