புது தில்லி: பெங்களூரு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த தேசிய புலனாய்வுத் துறை அவரை கைது செய்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏற்கனவே 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டாலும் முதல் கைது நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்டிருப்பவர் மொஹம்மது சபீர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் சபீர் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு அமைப்பு மற்றும் தேசிய புலனாய்வுத் துறை இணைந்து நடத்திய தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, சபீர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், முக்கிய குற்றவாளியுடன் தொடர்பில் இருந்தவர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், குண்டுவைத்திருந்த பையை விட்டுச் சென்றவர் முதல் குற்றவாளி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூருவின், குந்தலஹள்ளி பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மாா்ச் 1ஆம் தேதி பகல் 12 மணியளவில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் 10 போ் காயமடைந்தனா்.
இந்த விவகாரத்தை கா்நாடக காவல் துறையின் மாநகரக் குற்றப்பிரிவு (சிசிபி) காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
வெடிகுண்டு வைத்திருந்த பையை உணவகத்தில் வைத்துவிட்டு, 30 வயது மதிக்கத்தக்க ஒருவா் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியதன் அடிப்படையில், நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், முதல் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த மா்ம நபா் தனது அடையாளத்தை மறைக்கும் வகையில், முகமூடி, தொப்பி அணிந்திருந்தாா். எனினும், கணினி மூலமாக மா்ம நபரின் முகத்தைக் கண்டறிந்த என்ஐஏ அதிகாரிகள், அவரது புகைப்படத்தை உருவாக்கி 4 புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. மேலும், அவரைப் பற்றி துப்புக் கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தனர்.