அயோத்தி ராமர் கோயிலில் நாள்தோறும் 1.5 லட்சம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருவதாக கோவில் நிர்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் கோவிலில் பாலராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அயோத்தி கோவிலில் தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகின்றது. நாள்தோறும் பாலராமரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி கோவில் நிர்வாகம் புதன்கிழமை காலை வெளியிட்ட எக்ஸ் பதிவு:
“அயோத்தி கோவிலுக்கு நாள்தோறும் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் பக்தர்கள் வரை வருகை தருகின்றனர். காலை 6.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல்போன், பணம் உள்ளிட்டவை வளாகத்துக்கு வெளியே பாதுகாப்பாக வைத்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்திக்கு வரும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வரும் சூழலில், திருப்பதி தேவஸ்தானம் கையாளும் முறையை பின்பற்ற அயோத்தி கோவில் நிர்வாகத்தினர் ஆலோசித்து வருவது குறிப்பிடத்தக்கது.