காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு ஆலோசனையில் எந்தவித முடிவும் இதுவரை எட்டப்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று (மர்ச் 19) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி. ராஜீவ் சுக்லா, மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் இன்னும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
பின்னர் ஹிந்து மதத்தில் சக்தி என்ற சொல் குறித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராகுல் காந்தியின் பேச்சை பாஜகவினர் திரித்துக் கூறி பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். தீய சக்தியைத்தன், ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டார். அவர் கடவுளின் சக்தி குறித்து அவதூறாகப் பேசவில்லை எனக் கூறினார்.
மும்பையில் நடைபெற்ற ஒற்றுமை நீதி பயணத்தின் நிறைவு விழாவின்போது பேசிய ராகுல் காந்தி ஹிந்து மதத்தில் சக்தி என்ற வார்த்தை உள்ளதாகவும், சக்தி என்றால் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் சக்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருப்பதாக விமர்சித்தார். அந்த சக்திக்கு எதிராக நாம் போராடவுள்ளதாகவும் ராகுல் கந்தி குறிப்பிடிருந்தார்.