பதஞ்சலி ஆயுர்வேத மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்கள் வெளியிடுவது குறித்து உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மாதம் தொடரப்பட்ட வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த உச்சநீதிமன்றம், பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அஹ்ஸானுத்தீன் அமானுல்லாஹ் அமர்வில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதஞ்சலி நிறுவனம் பதிலளிக்காததை கண்டித்த நீதிபதிகள், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக்கூடாது என்று கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, வழக்கின் அடுத்த விசாரணையின்போது பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.