உணவு டெலிவரி சேவையை வழங்கி வரும் சோமேட்டோ நிறுவனம், சைவப் பிரியர்களுக்கான புதிய சேவையை நேற்று தொடங்கியிருந்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களின் உணவுத் தேர்வுகளின் அடிப்படையில், நிறத்தால் பிரிவினையை ஏற்படுத்துவதாக இருப்பதாக, பச்சை நிறப் பெட்டியில் சைவ உணவுகள் மட்டும் விநியோகம் செய்யும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட வெறும் 11 மணி நேரத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி தீப்பிந்தர் கோயல், சைவப் பிரியர்களுக்கு மட்டும் தனியாக உணவு வழங்கும் சேவையை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
செவ்வாயன்று சொமேட்டோ நிறுவனம், சைவ உணவுகளை தனியாக டெலிவரி செய்யும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியது. இந்த உணவுகளை எடுத்துவரும் ஊழியர்கள் பச்சை நிற சீருடையிலும், உணவுப் பொருள்கள் பச்சை நிறப் பெட்டியிலும் எடுத்து வரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் வந்தன. முக்கியமாக, நிற அடிப்படையில் உணவுத் தேர்வை பிரிப்பதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான், சொமேட்டோ நிறுவனம், தனது அறிவிப்பை திரும்பப் பெற்றுக்கொண்டது. மேலும், சில விசேஷ நாள்களில், அசைவம் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் அல்லது சில சமூக அமைப்புகளில் எதிர்ப்புகள் கிளம்பலாம் என்பதை நாங்கள் இப்போதுதான் உணர்கிறோம். எங்களால் இதுபோன்ற ஒரு பிரச்னை வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுவதைத் தவிர்க்கவே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அறிவித்துள்ளார்கள்.