நிப்டியிலும் சென்செக்ஸிலும் முன்னணியில் இருக்கும் பெரு நிறுவனங்கள் அளித்த தேர்தல் நன்கொடையில் 81 சதவிகிதத்தைப் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கிறது.
தேர்தல் ஆணையத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி அளித்த தகவல்களிலிருந்து, ஏப்ரல் 2019 முதல் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் நிப்டி 50 பட்டியலிலும் அவற்றில் 8 நிறுவனங்கள் பிஎஸ்இ சென்செக்ஸிலும் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரும் 50 நிறுவனங்களின் சராசரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பட்டியல் நிப்டி 50 என அழைக்கப்படுகிறது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 15 நிறுவனங்கள், ஒட்டுமொத்தமாக ரூ.646 கோடிக்கு (சென்செக்ஸில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கொள்முதல் செய்த ரூ.337 கோடி உள்பட) தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்கியுள்ளன.
அவற்றில் 81 சதவிகிதம் அதாவது ரூ.521 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை பாஜக பெற்றுள்ளது.
30 மிகப்பெரும் நிறுவனங்களின் அட்டவணையான சென்செக்ஸில் இந்திய பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை சார்ந்த நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த 15 நிறுவனங்களில், 13 நிறுவனங்களின் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் பாஜகவுக்கு சென்றுள்ளன. சென்செக்ஸில் 6 நிறுவனங்கள் பாஜகவுக்கு பத்திரங்கள் அளித்துள்ளன.
பாஜகவுக்கு அடுத்த இடத்தில் தெலங்கானாவில் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி இடம்பெற்றுள்ளது. ஓட்டுமொத்தமாக இந்த நிறுவனங்களிடமிருந்து ரூ.53.6 கோடி நன்கொடையை பிஆர்எஸ் கட்சி பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி, ரூ.21.2 கோடி அளைவில் தேர்தல் நன்கொடையை நிப்டி நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளது.