மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று ஹேமமாலினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுராவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பிரதமர் மோடி நிர்ணயித்த இலக்கை அடைய நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம். நாட்டு மக்கள் எங்களுடனும், பிரதமர் மோடியுடனும் உள்ளனர். நாங்கள் நிச்சயமாக 400ஐ கடப்போம் என்றார். உ.பி.,யின் மதுரா மக்களவைத் தொகுதியில் ஹேமமாலினியை பாஜக மீண்டும் நிறுத்தியுள்ளது.
இங்கு ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 543 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் சுமார் 10.5 லட்சம் வாக்குச் சாவடிகளில் 1.5 கோடி வாக்குச் சாவடி அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் நடத்தப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பல்வேறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.