புது தில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தில்லியில் போராட்டம் நடந்த நிலையில், ஜெர்மன் தூதர் கருத்துத் தெரிவித்திருந்ததற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியிருக்கிறது.
மத்திய வெளியுறவுத் துறை அனுப்பியிருக்கும் சம்மனில், இந்திய உள்நாட்டு விவகாரத்தில் அப்பட்டமான குறுக்கீடு என்று சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.
ஜெர்மன் துணைத் தூதர் ஜார்ஜ் என்ஸ்வெய்லர், புது தில்லியில் நடந்த போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக கருத்துப் பகிர்ந்திருந்ததற்காக வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் சம்மன் பெறப்பட்டுள்ளார். இன்று காலை சௌத் பிளாக் பகுதியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அழைக்கப்பட்ட ஜார்ஜ், நேரடியாக அறிவுறுத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கேஜரிவாலுக்கு எதிரான வழக்கில், நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த கருத்தினைத் தொடர்ந்து இந்த சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.
தில்லியில், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை, புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்தது. அவர் தற்போது அமலாக்கத் துறையின் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கைது நடவடிக்கையை எதிர்த்து தில்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.