

கலால் கொள்கை தொடா்பான பணமோசடி வழக்கில் விசாரணை ஆஜராகக் கோரி அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் திரும்பப் பெற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.
அழைப்பாணைகளைத் தொடா்ந்து அமலாக்கத் துறை முன்பாக ஆஜராகாதது தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட குற்ற வழக்குகளிலிருந்து கேஜரிவால் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை மேலும் தொடர அவா் விரும்பவில்லை என தில்லி முன்னாள் முதல்வா் கேஜரிவால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய மற்றும் நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் தெரிவித்தாா்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, விசராணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய முகமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, வழக்கு திரும்பப் பெறப்படும் நிலையில் அது ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்து.