அயோத்தியா: வரவிருக்கும் கோடைக்காலம் மற்றும் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக, அயோத்தியா கோயிலில் உள்ள ராமர் சிலைக்கு இதுவரை பட்டாடை அணிவிக்கப்பட்டுவந்த நிலையில், இனி புத்தம் புது பருத்தி ஆடைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்படுகிறது.
இந்த புதிய அலங்காரம் சனிக்கிழமை முதல் தொடங்கியிருக்கிறது.
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திரத்தின் எக்ஸ் வலைத்தளப் பதிவில், இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. கைத்தறியில் தயாரிக்கப்பட்ட மல்மல் வகை பருத்தி ஆடையைத்தான் இன்று ராமர் அணிந்திருக்கிறார். இயற்கை நிறமிகளுடன் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கோடை வெப்பத்தைத் தாக்குப்பிடிக்கும் வகையில், இந்த பருத்தி ஆடை பகவானுக்கு அணிவிக்கப்பட்டிருப்பதாகவும் இது எடை குறைவானதாக இருப்பதால் இறைவனுக்கு அணிந்திருக்க எளிதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பால ராமரின் கருஞ்சிலை உருவம், மைசூருவைச் சேர்ந்த கலைஞரால் தயாரிக்கப்பட்டு, தற்போது அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாள்தோறும் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள்.
இறைவனை கருவறைக்குள் பிரதிஷ்டை செய்யும் விழாவானது ஜனவரி 22ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.