2024 மக்களவைத் தேர்தல் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கானது அல்ல என்றும் மாறாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். இம்மாநிலத்தின் வாராணசி தொகுதியிலிருந்து பிரதமர் மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.
பிரசார மேடையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக அரசு தொடர்ந்து 3வது முறை ஆட்சிப் பொறுப்பேற்கத் தயாராகி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டு மக்கள் பார்த்தது வளர்ச்சியின் டிரெய்லரை மட்டுமே. அடுத்தமுறை ஆட்சியில் நாட்டை இன்னும் வேகமாக முன்னேற்றுவோம்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்பது வெறும் அரசை உருவாக்குவதற்கானது மட்டும் இல்லை. மாறாக வளர்ந்த பாரதத்தை உருவாக்குவதற்கானது.
உலக அளவில் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும். வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினர் நாட்டுக்கு புதிய பலத்தை வழங்குவார்கள்.
அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் மூதலீட்டை இந்தியா உருவாக்கியுள்ளது
ஊழலுக்கு எதிராக போராட்டத்தை தொடங்குவதாக அறிவித்து இந்தியா கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால், ஊழலில் ஈடுபட்டவர்கள் தற்போது கம்பிகளுக்கு பின்னால் இருக்கிறார்கள்.
இந்தியா எனது குடும்பம். 10 கோடி பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் அங்கமாக உள்ளனர். 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக உருவாக்குவதே நம் கனவு. அதை நோக்கி நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இது மோடியின் உத்தரவாதம் என பிரதமர் மோடி பேசினார்.