ஆப்பிள் நிறுவனம், புதிய சவாலை சந்தித்துள்ளது, அந்நிறுவனத்தின் ஐஃபோன்களில் அலாரம் வேலை செய்யவில்லையாம். இதனால், உலகின் மூலைமுடுக்கிலிருந்து எல்லாம் புகார்கள் குவிகின்றன.
ஆப்பிள் ஐஃபோன்களில் கடந்த ஒரு சில நாள்களாக அலாரம் செயலிழந்துவிட்டதால், அதனைப் பயன்படுத்துவோர் தாமதமாக எழுந்து, தாமதமாகவே அலுவலகம் செல்வதாகக் குற்றச்சாட்டுகள் குவிந்துள்ளன.
ஏற்கனவே ஆப்பிள் ஐஃபோன்களில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது வாடிக்கைதான். ஆனால், இதுதான் முதல் முறை, ஐஃபோனில் அலாரம் வேலை செய்யவில்லை என்று இந்த அளவுக்கு புகார்கள் குவிவது என்கிறது ஆப்பிள் நிறுவனம்.
அதாவது, ஐஃபோனில் இருக்கும் கடிகார செயலி வேலை செய்யவில்லை. இதனால், அலாரம் அடிக்க வேண்டிய நேரத்தில், அது ஒலி எழுப்புவதில்லை, அல்லது அலாரம் வைத்திருக்கும் நேரத்தில் செல்ஃபோன் ஒலிப்பதில்லை என்று வாடிக்கையாளர்கள் கதறுகிறார்கள்.
சமூக வலைத்தளமான ரெட்டிட் தளத்தில், ஐஃபோன் பயனாளர்களின் புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும், ஐஓஎஸ் அப்டேட் செய்ததும் அலாரம் சரியாகவிடும் என்றும் ஆப்பிள் நிறுவனம் விளக்கம் அளித்து வருகிறது.
ஆனால், அலாரம் இயங்காததற்கான சரியான காரணத்தை நிறுவனம் தெரிவிக்கவில்லை.
எப்போதும் கோழிக் கூவி எழும் பழக்கம் உடைய மனிதன், தற்போது, கையில் ஒரு ஃபோனை வாங்கி வைத்துக்கொண்டான். அதுவே, நேரம் காட்டும், அதுவே அலாரம் வைத்தால் எழுப்பிவிடும். அதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று எத்தனை தூரம் நடந்தாய், எவ்வளவு தண்ணி குடித்தாய் என அனைத்தையும் சொல்லிவிடும் அளவுக்கு அதற்கு மனிதன் அடிமையாய் மாறிக்கொண்டிருக்கும் காலமாகிவிட்டது. இதனால், உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆப்பிள் ஐஃபோன் வைத்திருப்போர் தாமதமாக எழுவதாகவும், வேலைக்கும் தாமதமாகச் செல்வதாகவும் கூறப்படுகிறது.