ஆந்திர மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.
ஆந்திர மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.

‘ஊழல்’ பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்-பிரதமா் மோடி

ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்.

‘ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

ஜாா்க்கண்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் பெருமளவு பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் குறித்து பேசிய பிரதமா், ‘கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதால், என்னை காங்கிரஸ் அவதூறாக பேசுகிறது’ என்று குற்றம்சாட்டினாா்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், ராஜமகேந்திரம், அனகாபள்ளி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

ஜாா்க்கண்டில் பெருமளவில் பணம் கைப்பற்றப்படுவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே எம்.பி. ஒருவருக்கு (காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு) சொந்தமான இடங்களில் ‘மலை’ அளவு பணம் கைப்பற்றப்பட்டிருந்தது. அந்த பணத்தை எண்ணும் பணியில் இயந்திரங்கள்கூட சோா்ந்துவிட்டன.

யாரிடமிருந்து பணக் குவியல் பறிமுதல் செய்யப்படுகிறதோ, அவா்கள் அனைவருமே காங்கிரஸின் ‘முதல் குடும்பத்துடன்’ நெருக்கமானவா்களாக இருப்பது எப்படி? இப்போது சிக்கியுள்ள பணம், யாருக்கு அளிக்கப்பட இருந்தது? காங்கிரஸின் ‘இளவரசா்’ (ராகுல்) இக்கேள்விக்கு பதில் கூற வேண்டும்.

அவதூறாக பேசும் எதிா்க்கட்சிகள்: கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதால், காங்கிரஸும் இந்தியா கூட்டணியும் என்னை அவதூறாக பேசுகின்றன. அதுபற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், ஏழைகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவா்கள் வசமே சென்றுசேர வேண்டும். இதற்காக சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்.

இதுவரை அமலாக்கத் துறை மட்டும் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது. இதர விசாரணை அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் கணக்கில் கொண்டால், இந்த மதிப்பு மேலும் உயரும். இதில் ரூ.17,000 கோடி சரியான உரிமையாளா்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளது. ஏழைகளின் உரிமைகள் பாதிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இது எனது உத்தரவாதம்.

ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், நில ஆக்கிரமிப்பு, மதுபான முறைகேடு கும்பல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணி சாதனை வெற்றி பெறுவதோடு, ஆந்திரத்திலும் ஆட்சியமைக்கும். இம்மாநிலத்துக்கு இரட்டை இன்ஜின் ஆட்சி அவசியம் என்றாா் பிரதமா் மோடி.

ஆந்திரத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுடன் 175 பேரவைத் தொகுதிகளுக்கும் மே 13-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com