கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் பேச்சுத் திறனற்ற தனது ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், தண்டேலிக்கு அருகில் உள்ள கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் தம்பதி ரவி குமார் ஷெல்லே மற்றும் சாவித்ரி. இவர்களுக்கு பேச்சுத் திறனற்ற வினோத் என்கிற ஆறு வயது மகன் இருக்கிறான். சனிக்கிழமை இரவு சிறப்புத் திறன் கொண்ட குழந்தையின் நிலை குறித்து பெற்றோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த சாவித்திரி, தூங்கிக்கொண்டிருந்த மகனை தூக்கிச்சென்று அருகிலுள்ள முதலைகள் நிறைந்த கால்வாயில் வீசியுள்ளார்.

ஆனால் வீடு திரும்பியதும் மனம்கேட்காத சாவித்ரி தன் மகனை தண்ணீரில் வீசிவிட்டதாகவும் தயவு செய்து அவனை காப்பாற்ற உதவுங்கள் என்று கதறி அழுதுள்ளார். வினோத் உயிருடன் இருந்தால் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவனை தேட ஆரம்பித்தனர். மேலும் சிலர் தண்டேலி கிராமிய காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் மற்றும் டைவர்ஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஆரம்பத்தில், சிறுவன் அடர்ந்த மரத்தின் நடுவில் விழுந்திருக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். இருந்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவனை தாய் நேரடியாக கால்வாயில் வீசியிருக்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம் என்று கிராமவாசி ஒருவர் தெரிவித்தார். நேரில் பார்த்த சாட்சியான சந்தோஷ் கூறுகையில், முதலை ஒன்று உடலை வாயில் வைத்திருப்பதை நாங்கள் பார்த்தோம். மீட்புக் குழுவினர் மீண்டும் தேடுதல் பணியைத் தொடங்கிய பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை சிறுவனின் உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன என்றார்.

மகன் வினோத்தால் என்ன பயன். அவன் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறான். அவனை வேறு எங்கேயாவது தூக்கி எறி. அவன் சாகட்டும் என்று தன் கணவர் அடிக்கடி கூறுவார் என்று போலீஸாரிடம் சாவித்திரி தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தம்பதி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய சாவித்ரி, தனது கணவர் மனரீதியாக சித்திரவதை செய்ததாகவும், மகனின் மரணத்திற்கு அவர்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com