
தேர்தல் நன்கொடை நிதிப் பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக் கோரி செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பொதுநல மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.
இதையடுத்து, இந்த மனு தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் விசாரணைக்கு பட்டியலிடுவார் என்றும் சஞ்சீவ் கண்ணா தெரிவித்தார்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ள நிறுவனங்களின் நிதி ஆதாரத்தை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரப்பட்டுள்ளது.
தேர்தல் நன்கொடை பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் இப்பத்திரங்கள் விநியோகம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்கவும், அதனை தேர்தல் ஆணையம், தனது வலைதளத்தில் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.